1.7.15

சென்னையில் ”சொகுசு” தொடர்வண்டி !!

இன்று சென்னை சொகுசு தொடர்வண்டியில் பயணித்து பார்க்கலாம் என்று வடபழனியில் இருந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் சென்றேன்...

அன்றாடம், தேவைக்காக பயணிக்க முடியாத கட்டணம் தான், நம்மை மற்றொரு முறை என்று வருவோமோ என்று யோசிக்க வைக்கிறது...
கட்டணத்திற்காக ரூவா தாளை தடவி தடவி கொடுக்க வேண்டியதாக இருக்கிறது..
ஆனால், தொடர்வண்டி பயணம் புது அனுபவம் தான்...
சொகுசான பயணம்..
சுற்றுலா செல்வது போல் இருந்ததே தவிர...
மீண்டும் வர மனம் தோன்றவில்லை...
பயணித்த அனைவருமே புதிய அனுபவத்தை நுகர வந்தவர்களே தவிர... பொது பயன்பாட்டுக்கு உகந்ததாக கருதவில்லை...
அரசு.. கட்டணத்தை கொஞ்சம் கருணையோடு குறைத்தால் பாமரனும் படியேறி பயணிப்பான்...
இல்லையேல்... வழக்கம் போல் வெள்ளை பலகை பேருந்தில் படியிலேயே பயணிப்பான்...



23.3.15

கட்செவி அஞ்சல்

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எண்ணற்ற கண்டுப்பிடிப்புகள், ஆராய்ச்சிகள் என நொடி பொழுதில் பல மாற்றங்களை கண்டு வருகிறோம்...

அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்கு பெயரிடும் முறை வரையறுக்கப்பட வில்லை என்றாலும், கண்டுப்பிடிப்பாளர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே, அதன் தன்மையை பொறுத்து கண்டுப்பிடிப்புகள் பெயரிடப்பட்டுள்ளன.

எனினும், அது பன்மொழி பயன்பாட்டின் போது காரணம்/செயல்பாடு/தன்மை பொறுத்து மொழி மாற்றி பெயரிடப்படுகிறது.

இது மொழிபெயர்ப்பாகவும் சில சமயம் அமைந்து விடுகிறது.

குறிப்பாக தகவல் தொழில்நுட்ப சேவைகளில் எண்ணற்ற புது சொற்கள் ஆங்கிலத்திலேயே முளைத்துள்ளன.

ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற கருவிகள் அகராதியில் கிட்டத்தட்ட ஒரு சொல்லாக இடம்பெற்று விட்டன.



சரி, நான் சொல்ல வேண்டிய கருத்தை முதலில் பகிர்ந்துவிடுகிறேன்.

தினமணி செய்தித்தாளில் ஒரு புதிய சொல் பயன்பாட்டை காண முடிந்தது. ”கட்செவி அஞ்சல்”.

அது என்ன கட்செவி அஞ்சல். கண்+செவி = கட்செவி

முன்னர் குறுஞ்செய்தி மூலம் வெறும் எழுத்தோ அல்லது படமோ அனுப்பிகொண்டிருந்தோம்.

இப்பொழுது வாட்ஸ் அப் எனும் மென்கருவி மூலம் ஒளி, ஒலி, உரை என காணக்கூடியது, கேட்க கூடியதுமாக தகவல் அனுப்புகிறோம்.

இதற்கு கட்செவி என்று பெயரிட்டு அழைப்பது என்பதை பொதுவெளியில் அரிது. அதாவது தனித்தமிழில் மாற்றி பயன்படுத்துவதை யாரும் சிந்திப்பதில்லை.

தொழில்நுட்பத்தின் வேகத்தில், அப்படியே அதை ஏற்றுக்கொண்டு நாமும் பயணிக்கிறோம்.

இங்கு அறிவியல் தமிழின் முக்கியத்துவம் நாம் அறிய வேண்டியுள்ளது.

மக்கள் தொலைக்காட்சி, தமிழ் ஓசை ஆகிய ஊடகங்கள் தனித்தமிழ் பயன்பாட்டை நடப்பு காலக்கட்டத்தில் கொண்டு வந்தன. ஆனால் அதன் வளர்ச்சி, ஊக்குவிப்பு தமிழர்களிடையே இல்லையாதலால் முடங்கி கிடக்கின்றன.

ஆயினும், ஊடகங்கள் - தமிழாக்கம், குறிப்பாக அறிவியல் சொற்களுக்கு தெளித்தமிழில் பெயரிட்டு பயன்பாட்டில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் என்பதே எமது அவா.

ஊடகங்களின் பயன்பாட்டால் பொது மக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டு செல்லமுடியும்.

அந்தவகையில் கலைச்சொல்லாக்க முயற்சிகளில் அனைவரும் ஈடுபட வேண்டும். இதனை இழுக்கு, பின்னோக்கிய பார்வை என்றெல்லாம் விட்டொழித்து, நம் தாய்மொழியில் எது இல்லை என்று கேட்கும் அளவுக்கு சொல்லாக்கங்கள் அமைய வேண்டும்.

எனவே தமிழர்களே ஒன்றிணைவோம்... தமிழை வளர்க்க...



தினமணியின் பல்வேறு தமிழாக்க முயற்சிகள் பாராட்டக்கூடியது. அந்த வகையில் வாட்ஸ் அப்-க்கு கட்செவி அஞ்சல் என்று பயன்படுத்தி அண்மை காலமாக கையாண்டு வருவதை வரவேற்கிறேன். இது போன்று பல்வேறு தமிழ் சொற்கள் தினமணி கையாண்டு வருவதும் நாம் அறிந்ததே.. இருந்தாலும், தற்போது வாட்ஸ் அப் புரட்சி உருவாகி இருப்பதால், இந்த பதிவை நமது நவின நண்பர்களுக்கு நினைவூட்டி, தமிழூட்டி மொழி காப்போம் என்ற எண்ணத்தில் எழுது உள்ளேன்.

அதேபோல் காலத்தே தினமணியை பாராட்ட வேண்டியது நமது கடமையும் கூட..

- வெ.யுவராஜ்

14.3.15

புதிய தலைமுறை....

புதிய தலைமுறை தொலைக்காட்சி நிலையம் தாக்கப்பட்ட தகவல், ஒட்டுமொத்த ஊடகவியலாளர்களின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பி விட்டது. கருத்து சுதந்திரம் என்பதில் இருந்து ஊடக ஊழியர்களின் பாதுகாப்பு வரையிலான அனைத்து மட்டத்திலும் குரல்கள் ஒலித்தன. ஒலிக்கின்றன.

இங்கு கவனிக்க வேண்டியது.

ஒரு ஊடகம் தனது பதிப்பில் அல்லது ஒளிபரப்பில் சிறப்பு தொகுப்புகளை வழங்கும் போது, நடுநிலைமை அல்லது உண்மையின் பக்கமிருந்து தனது கருத்தை ஆழமாக முன்மொழியும்; அதற்கான ஆதரவு குரல்களையும் பதிவு செய்யும்.

அதேபோல், சர்ச்சை ஏற்படும் வாய்ப்புள்ள பொருளில் ஆவணமாக்கும்போது, இரு தரப்பு கருத்துகளையும் பதிவாக்கி ஒளிபரப்பவோ, பதிவிடவோ செய்யும்.

நிற்க.

ஒரு செய்தியில் தனி நபரையோ, நிறுவனத்தையோ, அரசையோ, அமைப்பையோ குற்றஞ்சாட்டுவதாக இருந்தால், குற்றஞ்சாட்டுக்கு ஆளாகுபவரின் பதில்/கருத்தை கேட்டு அதனையும் சேர்த்து ஒளிபரப்புவதையே பெரும்பான்மை ஊடகங்கள் கடமையாக கொண்டுள்ளன. அந்த வகையில், புதிய தலைமுறை கவனமாக செய்திகளை கையாண்டு வருவதை மறுக்க முடியாது.

இந்நிலையில், தலாக் என்ற ஆவணப்படமும், தாலி குறித்த விவாத நிகழ்ச்சியும் நேரலையாக இல்லாமல் பதிவு செய்து தணிக்கை செய்து பின்னர் ஒளிபரப்ப திட்டமிட்டிருந்தது புதிய தலைமுறை.

ஆனால் அதனை முழுமையாக பார்க்காமல் மதங்களின் பிரதிநிதிகளாக நினைத்துக்கொண்டிருப்பவர்கள் எதிர்த்தார்கள்... விளைவு... திட்டமிட்ட நாளில் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.

இரண்டு நிகழ்வுகளும் வெவ்வேறு காலக்கட்டத்தில் நிகழ்ந்தன.

தங்கள் கருத்துகளை முன்வைத்து போராடுவது எதிர்ப்பவர்களின் உரிமை. ஆனால் அதுவே எல்லைமீறி எதிர் தரப்பை அழித்தொழிக்க நினைப்பது எப்படி ”அறம்” ஆகும்.

ஒளிபரப்புவதாக திட்டமிட்டிருந்த நிகழ்ச்சிகளை முழுமையாக பார்க்காமலே எதிர்ப்பதில் என்ன நியாயம் இருக்கிறது என்பது தான் புரியாத புதிர்.

இவர்களை அறிவிலி என்பதை விட பகுத்தறிய பயப்படுகிறார்கள் என்கிற பொருளிலே நாம் கையாள வேண்டியிருக்கிறது.




இன்னொருபுறம் அரசியல்.

ஆளும் கட்சிக்கு எதிரானவர்களுக்கு தீனிப்போடும் சம்பவமாகவும் இது மாறிவிடுகிறது.

ஆக, இங்கு ஊடகங்கள் நிலைக்கண்ணாடியாக இருக்கும் போதே இத்தனை அக்கப்போர் என்றால், கூகுள் கண்ணாடியாக மாறும் போது என்ன நிகழும்..?

அண்மையில் புதியதலைமுறை அலுவலகத்தில், வெடிக்கும் பொருளை (பட்டாசோ / வெடிகுண்டோ) வீசிவிட்டு சென்ற நபர்களால்.... ஊடக ஊழியர்களுக்கு மற்றுமொரு அச்சம் தொற்றுகிறது.

கருத்தால் சண்டையிட்டது போக... உயிரை பணயம் வைப்பது தான் அந்த அச்சம்.

இது தான் அச்சுறுத்தலின் உளவியல்....

ஆக..

அனைத்தையும் அடக்கி வைத்துக்கொண்டு, இதுபோன்று அச்சுறுத்தும் ........களை அழைத்து, கூடி பேசி, எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது என்பதை முடிவு செய்ய நாம் எந்த தருணத்திலும் பணிந்துவிடப் போவதில்லை...

ஊடக அதிபர்கள் கூட சில நேரங்களில் ஒத்துவராமல் போகலாம்...  ஆனால் ஊடகவியலாளன் அந்த வகையில் சமரசம் ஆகிவிடமாட்டான்.

ஊடகவியலாலர்களின் ஒற்றுமையும், ஒருமித்த குரலும்.... அண்மைக்கால நிகழ்வுகளில் நிதர்சனமாகிறது.

இது தொடர வேண்டும்... நியதிகளுக்குட்பட்ட எமது பயணமும் அவ்வாறு பயணமாகட்டும்.


கவனிக்க..

இந்த தருணங்களை சில “கோளாறுகள்” கோணலாக்கிவிடுவதும் நமக்கு சவாலானதே..


புதிய தலைமுறை தாக்கப்பட்ட செய்தி அனைத்து ஊடகங்களும் பதிவு செய்தன. நாடே கவனித்தது. நாடாளுமன்றத்திலும் ஒலித்தது.

இங்கு அந்த நிறுவனம் பப்ளிசிட்டி தேட வேண்டிய அவசியம் என்ன..?

தாக்கப்பட்ட செய்தியை சமூக தளத்தில் பதிவிட்டு, அதனை பணம் செலுத்தி பரவ செய்வதில் உள்நோக்கம் என்ன...?

விளம்பரம் தேடுகிறார்களா...? முகநூலில் லைக்குகளை பெற இதுதான் தருணமா..? கருத்துரிமைக்கு காவலாளி நீங்கள் என்பதில் கேள்வி எழுகிறதே..?

தெரியாமல் நிகழ்ந்துவிட்டதாக இதனை கூறிவிடமுடியாது என்றாலும், பொறுப்பற்ற சிலரின் இந்த செயல்கள் கொச்சைப்படுத்துவதாகவே தோன்றுகிறது...?

போராடிய அத்தனை பேரின் குரல்களுக்கு பின்னால் ஒரு நியாயம் இருக்கிறது.....

குறிப்பிட்ட இந்த செயலில் என்ன வெளிப்படுகிறது..?

கேள்வி மட்டுமே மிச்சம்....

கவனிக்குமா நிருவாகம்?


8.3.15

தோழி ! இயங்குவோம் மாற்றங்களை நோக்கி...

நீ என்றால் அழகு

ஒத்துக்கொள்வாயா...
அலங்கரிக்காமல் பொதுவெளியில் தோன்ற உன் மனம் ஒத்துவராது என்பதை..

இடைசிறுத்து, முலைபருத்து
உன்னை செதுக்கிவிட்டார்கள்.
கோவில் சிலைகளில் மட்டுமல்ல
கேளிக்கை திரைகளில்....

சொல் பார்ப்போம்
நீ காமத்தில் அடங்காதவள் என்று.

மதிப்புக்கூட்டிய உன் இயல்புகள் ஆண்களுக்கான சந்தையில் ஏராளம்...
உற்றுப்பார் உன் ஆடைக்குள் எத்தனை தாராளம்..

உன்னை திரைவிலக்கி
இன்பத்துக்கு இரை தேடும்
என் இனத்தின் உச்சகட்ட வன்மத்தை
உள்ளபடியே நியாயப்படுத்துவது நியாயமல்ல.

உன்னை கொண்டாடும் இந்நாளில்
உனக்காக உரிமைக்குரல் எழுப்புவதும்
வாழ்த்து கூறுவதும் வாடிக்கையானது.

எது அழகு என்பதை
படம் காட்டும்
பகடித்தனத்தை தோலுரி

சமத்துவம் தேடும் உன் பயணத்தில்
ஆண் வேடம் அணியும் உன் அறியாமையை கழற்றியெறி

ஆண்மையில் அறிந்துக்கொள்
ஆளுமையில் அடையாளங்கொள்

சொற்பதங்களில் ஒன்றுமில்லை
கற்(பு)பிதங்களை வென்றெடு

பாலியல் விடுதலையல்ல உன் விடுதலை
சமூக கட்டமைப்பின் கட்டவிழ்ப்பே நமது எல்லை.

தோழி ! ஒன்றுகொள்.

நான் (ஆண்) உனக்கு எதிரியில்லை
நாமின்றி ஒன்றுமில்லை

இயற்கையின் நியதியை உணர்ந்திடு
பொருளாதாரம் சமநிலையானால்
நமக்கில்லை பாகுபாடு; அறிந்திடு

இதுதான் காலம்
இயங்குவோம் மாற்றங்களை நோக்கி
இணைந்திடு கைகளை உயர்த்தி...!

- வெ.யுவராஜ்.

18.2.15

இந்திய (இந்தி/ஆங்கிலம்) ஊடகங்கள் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க என வாழ்த்துகின்றன...


என்ன? ஏன் ? என்கிறீர்களா.... நாம் பயன்படுத்தும் முகநூல், டிவிட்டரில் ஹாஷ்டேக் எனப்படும் குறியிடும் முறை என்று உள்ளது.

நாம் ஒரு கருத்துருவின் கீழ் தகவல்களை பகிர்கிறோம் என்றால், அதற்கான ஒரு பொதுவான தலைப்பிட்டு எழுத வேண்டும். அப்படி எழுதினால், நம்மைப்போன்று, நாம் எழுதிய கருத்தொத்து எழுதுவோரின் கருத்துகளையும் ஒரு சேர பெற்று படிக்கலாம், பகிரலாம்...

அப்படி டிவிட்டரில் “ தமிழ்வாழ்க “ என்ற ஹாஷ்டேக் தற்போது பிரபலமடைந்துள்ளது...

நம்புவீர்களா..?  தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இந்த பதிவிடும் முறை அதாவது ஹாஷ்டேக் செயல்படாமல் இருந்தது. தற்போது தான் செயல்படுத்தி இருக்கிறார்கள் டிவிட்டர் தரப்பினர்...

முதலில் இந்தி மொழி யில் பதிவிட்ட ஜெய்ஹிந்த் (#जयहिन्द) பிரபலமான ஹாஷ்டேக் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. தற்போது, சுமார் 24 மணி நேரத்திற்கு மேலாக #தமிழ்வாழ்க உள்ளது...
செம்மொழியாம் தமிழ் , இயல், இசை, நாடகம் என முத்தமிழாய் இருந்து சுவைபட நம் நாவில் தவழ்ந்தது...

தற்போது நான்காம் தமிழாம் அறிவியல்தமிழில் இணையத்தில் உயர செல்வதை உலகமே காணும் போது....

என்ன செய்ய... இந்தி, ஆங்கில ஊடகங்களும் முழக்கமிடுகின்றன... தமிழ் வாழ்க .. தமிழ் வாழ்க என்று...

16.1.15

உழவே உழவே உயிரென போற்றி...

காணாமல் போன கழனிகளை...
கூகுளில் தேடி
வாழ்த்து செய்தி வரைபவர்கள் நாம்...
பொங்கலுக்கு மட்டும் தான் ஏர் கலப்பையும், ஏறுதழுவலும் நமக்கு நினைவு வரும்...
அதுகூட புதிய தலைமுறைக்கு தெரிந்துவிடாதபடி, சதைமினுக்கும் சாக்கடையர்களின் கூத்தாட்டம் காட்டுகிறோம்..
பண்பட்ட நிலமும், பண்பாட்டு தடமும்,
இல்லாதொழித்து
இனி எதை நாம் உண்போம்..
உழவை ஏற்போம்...
அழிவை தடுப்போம்...
அறிவை பெருக்கி அண்டம் சுற்றும் எம்மால்
மண்ணை கிளறி மகசூல் காண முடியாதோ...
உழவே உழவே உயிரென போற்றி
உழவர் திருநாள் வாழ்த்துகளுடன்..

வெ. யுவராஜ்

19.11.14

உலக கழிவறை தினம் இன்று....



உலகின் 700 கோடி மக்களில் 250 கோடி மக்கள் மேம்பட்ட சுகாதாரமான கழிப்பறை வசதி பெறாமல் உள்ளனர்.

இன்னமும் 100 கோடி மக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

கழிவறை வசதி இல்லாததால், சில வேளை பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவும் நேரிடுகிறது.

இந்த நிலையை நாம் ஒருபோதும் ஏற்க முடியாது.

சர்வதேச வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததும் முதன்மையானதுமாக சுகாதாரம் வலியுறுத்தப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டே ஐநா மன்றம் நவம்பர் 19 ந்தேதியை உலக கழிவறை தினமாக அறிவித்துள்ளது.

இந்த தினத்தில் கிராமப்புறங்களில் சுத்தமான சுகாதாரமான கழிவறையை பயன்படுத்த மக்களிடம் விழிப்புணர்வு ஊட்ட ஒவ்வொரும் முயற்சி எடுப்போம்.



#worldtoiletday #opendefecation #sanitation

வணிகமொழியானது தமிழ்!

தமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...